விஷக்கிணறு- சுனில் கிருஷ்ணன்

விஷக்கிணறு குறுநாவல் மீதான எனது வாசிப்பு.

நான்கு பகுதிகளை கொண்ட குறு நாவலின் ஒவ்வொரு பகுதியும் மிக கூர்ந்த வாசிப்பை கோருவது எண்ணற்ற வாசிப்பு சாத்தியங்களை வாசகருக்கு அளிப்பதாக இருக்கும் என தோன்றுகிறது.

இதன் முதல் பகுதியில் வரும் மனைவியின் தற்கொலையால் மனம் வருந்தும் முதியவர். மனைவியின் தற்கொலையும் அதன் மீதான வழக்கும், மனைவியின் மெளனமும் மிகவும் பாதித்து அவரது மனைவியிடம் மன்னிப்பை கோரும் அவரது ஆத்மா. அவரது சந்தோஷ தருணங்களை தன் மரணத்துடன் எடுத்து சென்று விட்டது போல் அவரை விடாமல் துரத்தும் பழைய துர் நிகழ்வுகளின் நினைவுகள், அவரை ஆழ் கிணற்றில் விழ செய்து கொண்டிருக்கிறது. மெலாவாத்தி மலையில் வரும் தண்டனைக் கிணறு படிமமாக்கப்பட்டுள்ளது.
இந்த முதல் பகுதி கதைக்குள் உள்ள உள்கதையில் வரும் குரங்கு கூட்டத்தினை கிணற்றில் விஷம் வைத்து கொள்ளும் நிகழ்வு, ஒரு மரபான இந்திய மனம் எவ்வாறு இந்த மனித மனதின் கொடூரத்தை எதிர் கொள்கிறது என்று சொல்வதாக புரிந்து கொண்டேன்.
அதன் வழியாக அவரும் அவரது சந்ததிகளும் ஒரு விடுதலையை அடைவார்கள் என்றே தோன்றுகிறது.

இரண்டாவது பகுதியில் ஒரு தொன்மக் கதை சொல்லப்படுகிறது. இறையின் தீங்கனாவை திரட்டி ஆழத்தில் வைத்திருக்கும் ஒரு கிணற்றில் இறை ஆணையை மீறி இறங்கும் மனிதர்கள், இறைவனின் தோட்டத்தை எப்பொழுதுமாக இழக்கும் கதை. மனிதர்கள் தங்கள் வன்முறையை, அதன் ருசியை அறிந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்திலிருந்து விலகிய இளநீல கண்களை கொண்ட ஒருவனால் மனிதர்களின் உள்ளுணர்வை கொல்லும் ஒரு ஆயுதம் கிணற்றிலிருந்து எடுக்கப்பட்டு அளிக்கப்படுகிறது. தங்கள் அந்தர் ஆத்மாவை அல்லது உள்ளுணர்வை அல்லது அறவுணர்வை கொல்ல துரத்தி செல்லும் மனிதர்கள் இழப்பது என்றென்றைக்குமான இறைவன் வாழும் இடத்தை. இறைவனை கைவிட்ட மனிதர்களை இறைவன் கைவிடவில்லை, தோட்டத்தின் பாதை திறந்தே வைக்கப்பட்டுள்ளது. தன்னை அடையும் பாதையாக அந்த பொன் குருவியின் கனவையும், கதைகளையும் மனிதர்களுக்கு அளிக்கிறது.

மூன்றாவது பகுதியில்,  ஒரு பின் நவீனத்துவ எழுத்தாளன், கவிதை பட்டறைக்காக மலேசிய அழைக்கப்பட்டுள்ளார். அவர் அருங்காட்சியகத்தில் இருந்து வாயுமிழ்ந்து வெளியேறும் அந்த மனைவியை இழந்த முதியவரை பார்க்க நேரிடுகிறது. அந்த அருங்காட்சியகத்தை பார்வையிடும் அவர் அங்கிருக்கும் தண்டனை ஆயுதங்களை பார்த்து புகைப்படம் எடுத்துக்கொண்டு சக இளம் எழுத்தாளர் சரவணனோடு திரும்புகிறார்கள். மலேசியா வந்ததும் அனைத்து கட்டுகளையும் இழந்து மது, போதை, பெண் என திளைக்கிறார் அந்த எழுத்தாளர். அவரது ஒவ்வொரு கலக செயல்களும் எழுத்தாளர்கள் மத்தியில் தொன்மமாக உலவுகிறது. 
இரவில் கஞ்சாவில் திளைத்துக் கொண்டிருக்கும் போது கதவைத் தட்டி உள்ளே வரும் வெளிறிய இளநீல கண்களை உடைய வெள்ளையன், எல்லாவற்றிலும் நம்பிக்கையிழந்த மேற்கின், இரு உலகப்போருக்கு பிந்தைய காலத்தின் ஹிப்பி போன்ற ஒருவனாக எண்ணிக்கொள்கிறேன். அல்டாஸ் ஹக்ஸ்லியும் ஒரு சிறு குறிப்பாக வருகிறார். அவரது human potential movement ஹிப்பிகளுக்கான ஆதார கருக்களில் ஒன்று.
வலியில் துடித்து மன்னிப்பை கோரும் முதியவரும், மனித அறத்தின் மீதான கேள்விகளால் பற்றுதலை இழந்த வெள்ளையனும் எழுத்தாளரின் கதையாக மாறுகிறார்கள். அவற்றுடன் தான் வெறும் கலக குரலாக மாறும் அபத்தமும் சேர்ந்து கொண்டு, கலையை முன் வைக்க வேண்டிய அவசியமும் சேர்ந்து கொள்கிறது.

இந்த மூன்றும் கூர் கொள்ளும் கடைசி பகுதி, கவிதைகளை உள்ளடக்கிய கவித்துவமாக அமைந்திருக்கிறது. அணுகுண்டு வெடிப்பதற்கு காரணமாக அமையும் ஒப்பன்ஹைமரின் மனநிலைகள் நுட்பமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அவரது ஆளுமை, விஞ்ஞானியின் வாழ்க்கை என அறிவியலின் மீதான பெரும் பற்று, அதிகாரம் மற்றும் அவரது அக தடுமாற்றங்கள் என நேர்த்தியாக விரிகிறது. அறத்தின் குரலாக ரோட்ப்லாட்டை போல் விலகவும் முடியவில்லை. விஞ்ஞானிகள் எது உணமை என்பதை மட்டுமே அறிய முயற்சிக்க வேண்டும் என்று டெல்லரைப் போல் அவரால் பற்றிக் கொள்ளவும் முடியவில்லை. அவரால் அறத்தினையும் மறுக்க முடியாமல், உண்மையையும் மறுக்க முடியாமல் மெளனமாகவே இருக்கிறார். அவரது நண்பர் எழுப்பும் கேள்விகளுக்கு கவிதைகளை பதிலாக அளிக்கிறார். எந்த பதிலை விடவும் அது இன்னும் ஆழத்தை அளிக்கிறது. 
அனைத்தையும் கடந்து அணுகுண்டு சோதனை நடத்தப்படுகிறது. உணர்ச்சியற்ற முகத்துடன் அது வேலை செய்து விட்டது என்று மட்டுமே சொல்ல முடிகிறது அவரால். அவரது நண்பரிடம் என்ன தோன்றுகிறது என்று கேட்கும் போது அவரது பகவத் கீதையில் இருந்து "நானிப்போது காலப்பேருரு, உலகையழிக்க வந்திருப்பவன்" என்ற வரியைக் காண்பிக்கிறார். உண்மையில் அவருக்கு அது ஒரு வகையில் ஆசுவாசத்தை அளித்திருக்கும் என்று தான் தோன்றியது. அதற்கு பதிலாக அவர் " ஆயிரம் சூரியன்கள் ஒன்றாக தோன்றினாலும் கூட இந்த மகத்தான வடிவத்திற்கு ஈடாகாது" என்ற பகவத் கீதையின் இன்னொரு வரியைக் காண்பிக்கிறார்.

அந்த அணுகுண்டு சோதனையை நேரில் பார்த்த அனுபவத்தை விஞ்ஞானிகளிடம் கேட்கும் போது பூமியின் நரகத்தீ ஒரு கரமாக பொத்துக் கொண்டு விண்ணை குத்தியது போல் இருந்தது என்று அவரது நண்பர் சொல்கிறார். அத்துடன் அந்த பொன்னிற டானேஜர் பறவை அல்லது  அறக் குருவி லாஸ் அலமோஸ் என்னும் அந்த ஆராய்ச்சி நகரிலிருந்து எப்போதைக்குமாக வெளியேறியது என்று முடிக்கிறார்.

இந்த கதையின் 
இறுதியில் பகவத் கீதையின் "ஆயிரம் சூரியன்கள் ஒன்றாக தோன்றினாலும் கூட இந்த மகத்தான வடிவத்திற்கு ஈடாகாது" என்ற வரிக்கு ஓப்பி வந்தடைய சோவியத் அணுகுண்டை தயாரிக்க வேண்டி இருந்தது, ஹைட்ரஜன் குண்டை தயாரிக்க வேண்டியிருந்தது, அரசியல் அதிகாரத்திலிருந்து அவர் வீசி எறியப்பட வேண்டி இருந்தது என்று சொல்லப்படுவது இந்த கதையின் கண்டடைதலாக அமைகிறது என நினைக்கிறேன். தனக்கான பாவ மன்னிப்பையும், அற இழப்பையும் கடந்து அறிவியலின் அழகியலை பற்றிக் கொள்கிறார் என்று தோன்றியது.

Comments

Popular posts from this blog

அம்புப்படுக்கை சிறுகதை தொகுப்பு - வாசிப்பு

முத்தங்கள் சிறுகதை வாசிப்பு- ஜெயமோகன்

சிகண்டி வாசிப்பு குறிப்புகள்