வாடிவாசல் - சி சு செல்லப்பா - குறு நாவல் வாசிப்பு

விவசாயம் செய்து கூட்டமாக வாழத்துவங்கிய மனிதனுக்கு, விலங்குகளை பழக்கி உபயோகப் படுத்திக் கொள்வது நாகரீகத்தில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கும். விவசாய வேலைகளுக்கும் பயணத்திற்கும் பெரிய அளவில் காளைகள் உதவியிருக்கும். மனிதனின் நாகரீக வளர்ச்சிக்கு மனிதனை விட மாடுகள் அதிகமாக உழைத்திருக்கும் என்று கூட தோன்றுகிறது.

காளையை அடக்குதல் என்பது வன விலங்காக இருந்த காளையை அடக்கி பழக்குதலின் வழியாக இருந்திருக்கும். அந்த காலத்தில் காளையை அடக்குபவனின் வீரம் பெரிதும் போற்றுதலுக்கு உரியதாகவும் அதன் வழியே அவன் செல்வம் மற்றும் அதிகாரத்தினை அடைபவனாகவும் இருந்திருப்பான்.

நமது நாட்டில் காணப்படும் குகை ஓவியங்கள், சங்க இலக்கியங்களில் ஏறு தழுவுதலை கண்டு அச்சமடைபனை மகளிர் வெறுக்கும் சித்திரத்தின் வழியே ஜல்லிக்கட்டின் தொடர்ச்சியையும் அதன் பரிணாமத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது. குடிகளுக்கு இடையேயான போர்களில் ஆநிறை கவர்தல் முக்கிய இடம் வகித்ததையும் அறிய முடிகிறது.

வீரம் என்பது செல்வமாகவும் அதிகாரமாகவும் இருந்த காலத்திலிருந்து அதன் பிறகான கால கட்டத்தில் உருவாகி வந்திருக்கும் நிலப்பிரபுத்துவ சமூகத்தில் தொல் வீரத்தின் இடமென்ன என்பதையும், அதன் வழியே சமூக கட்டமைப்பின் அகத்தையும் சொல்வதாக இந்த வாடிவாசல் என்னும் நவீனத்துவ குறு நாவல் அமைந்துள்ளது.

பிச்சியும் அவனது தந்தை அம்புலியும் இன்றும் தொடரும் வீர யுகத்தின் எச்சங்கள். போட்டியில் வெல்பவனை தூக்கி தோலில் வைத்து கொண்டாடும் மக்களின் அகத்திலும் வீரத்தின் பெருமை இன்னும் குன்றாமல் தான் இருக்கிறது. சிறு வயதிலிருந்தே மாடு பிடிக்க பழகுதலும், எத்தனை உருமாக்களை வென்றோம் என்பதையே பெருமையாக கருதுதலும், வாடிவாசலில் நிகழும் தோல்விகளும், அதன் தொடர்ச்சியான வஞ்சங்களும் எல்லாம் இன்றும் தொடர்கிறது.

காரிக்காளை குத்தியதில் காயமடைந்து படுத்திருக்கும் போதும் வென்ற உருமாத்துணிகளையும் பரிசுப் பொருட்களையும் கேட்கும் பிச்சியின் அகத்தில் ஆழமாக வீரமே முதன்மையாக பதிந்திருக்கிறது.

ஆனால் ஜமீந்தாரருக்கு பிச்சி காட்டும் மறுக்க முடியாத பணிவிலிருந்து வீரம் என்பது அதிகாரத்தின் பீடத்திலிருந்து இறக்கப்பட்டு அங்கு பரம்பரையாக தொடரும் நிலவுடமை அதிகாரம் ஆட்சியில் இருப்பதை உணரமுடியும். இந்த மாற்றம் என்பது வீரத்தினை முதன்மையாக கருதுபவர்களாலும் ஏற்கப்பட்டிருக்கிறது.

பிச்சிக்கு களத்தில் தனது அனுபவத்தின் மூலம் அறிவுரை வழங்கும் வயசன், பிச்சியின் திறமையை கண்டு கொண்ட ஜமீன்தாராரை சுட்டி, ஜமீனின் கண் உன் மீது விழுந்துவிட்டதால் நீ அதிர்ஷ்டசாலி என்று சொல்கிறார்.

சிறுவயதிலிருந்தே செல்லாயி ஜல்லிக்கட்டினை அறிந்து வைத்துக் கொண்டிருக்கும் அந்த வயசனுக்கு, பிச்சியின் அப்பாவின் மீதும் காளை அணபவர்களின் மீதும் பெருமதிப்பு இருந்தாலும், பிச்சியிடம் காரிக்காளையை அடக்குவதற்கு முன்பு அவனின் வாழ்வினையும் அடுத்த சந்ததியை உருவாக்குவதன் அவசியத்தையும் பற்றி சொல்லி எச்சரிக்கிறார்.

அந்த ஜல்லிக்கட்டு நிகழ்வையே ஜமீன்தாரர் தான் நடத்துகிறார். அவரது அதிகாரத்தின் கீழ் தான் இந்த மாடுபிடி வீரர்களின் எல்லை அடங்கியிருக்கிறது.

அம்புலியால் அடக்க முற்படும்போது மொக்கையாத் தேவரின் காளையாக இருந்த காரி பின்பு ஜமீனால் வாங்கப்பட்டு அவரது அதிகாரத்தின் முகமாக நிறுத்தப்படுகிறது. தனது தந்தையை குத்தி கொன்ற காரிக்காளையை பழி தீர்க்க நினைக்கும் பிச்சி காளையை அடக்கிவிட்டு காயம்பட்டு கிடக்கும் இடத்திலிருந்து ஜமீனைப் பார்த்து எழ முயல்வதும், அவரிடம் ஜமீன் காளையை அடக்குவது தன் நோக்கமல்ல தனது தந்தையின் இறுதி வார்த்தைக்காகவே செய்ததாக சொல்வதும் அவனது உண்மையான உணர்வினை வெளிப்படுத்துவதாகவே அமைகிறது. அவன் ஜமீனின் அதிகாரத்தை எதிர்ப்பவன் அல்ல.

அதே சமயம், தனது காளையின் மீது ஒருவன் அணைவான் என்பதை ஜமீனால் ஏற்க முடியாமல் தான் பிச்சியை அழைத்து கேட்கிறார். ஆனால் அவன் உறுதியாக தன் நிலைப்பாட்டில் நின்றதும் அவரது மனம் செயல்படும் விதம் - நந்தியை போல் இருக்கும் காரியினை அணைவான் என்கிறானே -என்றிருப்பது நுட்பமாக அமைந்துள்ளது. ஜமீனின் அதிகாரம் கட்டமைக்கப்பட்டுள்ள கருத்துநிலையினை அது வெளிப்படுத்துகிறது. ஆனால் போட்டி துவங்கியதும் வீரத்தின் வசீகரத்தில் ஜமீன் செலுத்தப்படுவதும் அக உணர்வின் வெளிப்பாடாகவே தோன்றுகிறது. காளையை வெல்லும் பிச்சியை ஜமீன் சென்று சந்திப்பதும் அவனுக்கு பரிசு வழங்கி மருத்துவமனைக்கு தன் வண்டியிலேயே அனுப்பி வைப்பதும் போலியான உணர்வின் வெளிப்பாடுகளல்ல. அது ஜமீனின் அதிகாரம் கட்டமைக்கப்பட்டுள்ள எல்லை, அதை தாண்டுவது என்பது அவரது அதிகாரத்தின் அஸ்திவாரத்தை அவரே பெயர்த்துக் கொள்வது என்பது தான். வீர யுகத்தை சேர்ந்தவர்களின் உணர்வுகளின் வடிகாலாக அமைக்கப்பட்ட களம் தான் வாடிவாசல் என்று தோன்றுகிறது. கொராலு காளையை வென்ற பிச்சியை மக்கள் தோலில் சுமந்து ஜமீன்தார் அமர்ந்திருப்பதிற்கு இணையாக அவன் உயர்த்துப்படுவது என்பதும் குறியீட்டு ரீதியாக முக்கியமானது. வீரத்தின் மூலம் அதிகாரத்தின் உயரத்திற்கு செல்பவனால் அங்கு நிலைக்க முடியாது என்பதை அவன் அந்த உயரத்திலிருந்து விடுபட்டு பணிந்து அவர் முன் நிற்கும் காட்சி உணர்த்துகிறது. பல்வேறு இனக்குழு மக்களின் எண்ணற்ற சமரசங்களின் வழியே தான் அங்கு நிலப்பிரபுத்துவத்தால் நிலைக்க முடிகிறது.

காரிக் காளை அடக்கப்பட்டதும் அதுவரை வெல்ல முடியாது என்று மக்களால் கருதப்பட்டு சொல்லப்பட்டவை அனைத்தும் அப்படியே தலைகீழாக திரும்பி எதிரொளிக்கிறது. ஜமீன் மாடு மண்ணக் கவ்விரிச்சி என்று ஆர்ப்பரிக்கும் மக்களின் குரல் என்பது அதிகாரத்தின் மீதான ஒரு கண நேர வெற்றியின் குரல் தான். அந்த எதிர்க்குரலுக்கு ஜமீன் ஆற்றும் எதிர்வினை என்பது காரிக்காளையை சுட்டு வீழ்த்துவது. ஒரு மாடுபிடி குல வீரன் காரிக் காளையை பிடிக்க வரும்போது நந்தி தேவனை போல் இருப்பவனை போய் பிடிக்க துணிகிறானே என்று எண்ணும் ஜமீனுக்கு இப்போது அந்த காரிக்காளையை கொல்லும் போது அவ்விதமான மயக்கங்கள் ஏதுமில்லை. குடிகளின் மீது கருத்தியல் தன் ஆதிக்கத்தை செலுத்தலாம் ஆனால் அதிகாரத்தின் மீது கருத்தியல் அப்படியான ஆதிக்கத்தை செலுத்த முடியுமா என்ற கேள்வியை எழுப்பி விடுகிறது காரிக்காளையின் மரணமும் ஜமீனின் சிரிப்பும். 

குரு நித்யா நாவல் விவாத நாள் - 01.03.2025

Comments

Popular posts from this blog

அம்புப்படுக்கை சிறுகதை தொகுப்பு - வாசிப்பு

முத்தங்கள் சிறுகதை வாசிப்பு- ஜெயமோகன்

சிகண்டி வாசிப்பு குறிப்புகள்