புயலிலே ஒரு தோணி - வாசிப்பு
இரண்டாம் உலகப்போரின் காலத்தில் தமிழகத்திலிருந்து வெளி நாடுகளில் லேவாதேவி செய்யும் செட்டிகளின் உலகத்தை கதைக்களமாக கொண்ட நாவல். பல்வேறு விதமான நாடுகளைச் சேர்ந்த மக்கள் வாழும் உலகை மிக நேர்த்தியாக சித்தரித்திருக்கிறார். வெவ்வேறு வகையான உச்சரிப்புகள் நிற வேறுபாடுகள் உணவுகள். பண்டியன் என்ற பெயரை பாண்டீன், பாந்தியான், பாண்டையன், பாவன்னா என்று விதவிதமாக உச்சரிக்கிறார்கள். இந்தோனேசீயர், மலாய், சீன, டச்சு, ஜப்பான், ஆங்கிலேயர், தாய்லாந்து, அமெரிக்கர், கேரளர், தமிழர்கள் என்று பல வித மனிதர்கள் அவர்களின் பேச்சு வழியாக வெளிப்படுகிறார்கள். தமிழிலேயே செட்டிநாட்டு தமிழ், மதுரை, திருப்பத்தூர், சங்க தமிழ், விபசாரிகளின் தமிழ் என்று பல வகையில் மிகவும் செறிவாக அமைந்துள்ளது.
பாண்டியன் என்ற ஒரே ஒரு மைய கதாபாத்திரத்தை வைத்து நாவல் பயணிக்கிறது. அவனைச் சுற்றி மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் வேக வேகமாக நகர்ந்து செல்கின்றன. அவனது வாழ்க்கையில் சந்திக்கும் விதவிதமான மனிதர்கள் ஒரே அளவிலான முக்கியத்துவத்துடன் சொல்லப்படுகிறார்கள் என்றே தோன்றுகிறது. எந்த கதாமாந்தர்களும் சில பக்கங்களுக்கு மேல் நீடிப்பதில்லை. எந்த ஊரும் நிரந்தரமாக இருப்பதுமில்லை. எல்லாம் மாறிக் கொண்டே செல்கிறது.
இந்தொனேசீயாவிலிருக்கும் ஒரு செட்டி கடையில் அடுத்தாளாக வேலைக்கு சேர்ந்த பாண்டியன் பின்பு ஒரு கான்ட்ராக்டரிடம் குமாஸ்தாவாக பணியாற்றுகிறான். ஜப்பான் ராணுவம் இரண்டாம் உலகப்போரின் ஒரு பகுதியாக இந்தொனேசீயாவை கைப்பற்றும் நேரம் அது. உள்ளூர்க்காரர்களுக்கு விடுதலை என்ற கோஷத்துடன் நாட்டை டச்சுக் காரர்களிடமிருந்து கைப்பற்றும் ஜப்பான் ராணுவத்தை பெரும் ஆரவாரத்துடன் வரவேற்கிறார்கள். சைக்கிள்களிலும் மோட்டாரிலும் விரையும் படை வீரர்களுடன் ஆரம்பிக்கிறது முதல் பகுதி. போரில் வென்றதும் தோற்றவர்களின் வீடுகளை கொள்ளையிடுவது மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே தொடர்ந்து வருவது போலும். ஜப்பான் வீரர்கள் இந்தொனேசியாவில் நுழையும் போது கொண்டாடிய மக்கள், உள்ளூர்க்காரர்கள் கொள்ளையடிப்பதை தடுக்க ஐந்து பேர்களின் தலையை வெட்டி முச்சந்தியில் வைத்து தலை வாரிவிடும் ஜப்பான் வீரர்களை பார்த்து பயந்து ஓடுகிறார்கள். அடுத்தபடியாக எத்தனை உயர்ந்த குடியாக சொல்லிக் கொண்டாலும் போரிற்குபின் நிகழும் பலவந்தமாக பெண்களை சூறையாடுதல். எவ்வளவோ நாகரிக வளர்ச்சிக்குப் பின்னும் மனிதனின் அகம் செயல்படும் விதம் மிக பெரிய மாற்றங்கள் எதையும் அடைந்துவிட வில்லை என்றுதான் தோன்றுகிறது.
தோற்றவர்களை அடிமையாக்கி வேலை வாங்கும் ஜப்பான் ராணுவம், அதன் வளங்களை சுரண்டுகிறது. நேற்றுவரை அரசாண்ட டச்சு வீரர்கள் ஒரு கருவாட்டுத் துண்டிற்காக சண்டையிடும் மாற்றம். போரினால் தொழிலில் சுணக்கம் ஏற்பட்டு எப்போது சரியாகும் என்று ஓயாது பேசிக்கொள்ளும் வியபாரிகள்.
செட்டிகளின் கடைகளையும் அங்கு வேலை நடக்கும் விதத்தையும் மிக நெருக்கமாக உணரமுடிகிறது. முதுகு வளையாமல் உட்கார்ந்து காசை எண்ணி கட்டி போட்டுக் கொண்டே இருக்கும் பெட்டியடி பையன், மேலாளும் அடுத்தாளும் வட்டிக் கணக்கை பார்த்துக் கொண்டே நடு நடுவே பேசும் கதைகள். குடும்பத்தை விட்டு தள்ளியிருக்கும் ஆண்களுக்குள் ஓயாது தகித்திருக்கும் பெண் மோகம் அதற்கான மருந்துகள், மேற்படி தொழில் செய்பவர்களிடமிருந்து அடைந்த நோய்கள். எழுச்சியும் வீழ்ச்சியும் அடையும் பெரிய பெரிய மார்க்காக்கள் என ஒரு பொது அறிமுகத்தை அளித்துவிடுகிறார்.
மலேசியாவையும் ஜப்பான் காரர்கள் கைப்பற்றியபின் இந்தோனேசியாவிலிருந்து தொடங்கும் வியாபார சரக்கு போக்குவரத்திற்காக சீன தொங்கானில் தமிழ் வியாபாரிகள் பினாங்க் செல்கிறார்கள். போருக்குப்பின்னான இடிபாடுகள் நிறைந்த பினாங்கில் விபசார விடுதி மட்டும் தொடர்ந்து செயல் பட்டுக் கொண்டிருப்பதை பாண்டியன் காண்கிறான். அங்கு ஜப்பானின் ஆதரவோடு இயங்கும் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து போர் பயிற்சி பெறுகிறான் பாண்டியன். இந்திய தேசிய ராணுவத்தில் நடக்கும் உள்ளடி வேலைகளால் நடக்கும் கலவரத்தில் ராணுவ குற்றம் சுமத்தப்பட்டு சிறை செல்ல நேர்கிறது.
ஜப்பான் தனது அதிரடி நடவடிக்கைகளால் அமெரிக்காவை வீழ்த்த முனைந்து பேர்ள்ஹார்பரை தாக்கி பலத்த சேதத்தை உருவாக்குகிறது. ஜப்பானை விட பல மடங்கு ராணுவ பலம் கொண்ட அமெரிக்காவிடம் பசுபிக்கில் நடைபெறும் போரில் தோற்று பின் வாங்குகிறது. தொடர் அமெரிக்க தாக்குதல்களால் ஜப்பானின் கை துவள தொடங்குகிறது.
இன்னொருபக்கம் ரஷியாவின் தலைநகரை வெற்றி கொள்ள முனைந்திருக்கும் ஜெர்மானிய படைகள் மிக தீவிரமாக முன்னேறிக் கொண்டிருகின்றன. ஜப்பானின் வருகைக்காக சைபீரியாவில் நிறுத்தப்பட்டிருந்த ரஷிய ராணூவத்தின் ஒரு பகுதி, ஜப்பனியர்கள் தெற்காசிய பகுதிகளைக் கைப்பற்றுவதில் தீவிரமாக முனைந்திருப்பதால், ஜெரிமானிய படைகளை எதிர்கொள்ள பணிக்கப்படுகிறது. சைபீரியர்களின் வருகை செஞ்சேனைகளுக்கு மிக பெரிய உந்து சக்தியாக அமைந்து ஜெர்மானிய படைகளை தாக்கி பின் வாங்க செய்வதோடு, அவர்களை பின்னால் துரத்திக் கொண்டு ஜெர்மனியின் தலைநகரம் வரை செல்கின்றனர். ஹிட்லர் தற்கொலை செய்வதோடு ஜெர்மன் வீழ்கிறது.
ஜப்பானின் சரிவு தெளிவாகத் தொடங்கும் சமயத்தில் விடுதலையாகும் பாண்டியனுக்கு கர்னல் கலிக்குஸுமான், காணாமல் போன நேதாஜியின் கடிதத்தை கண்டுபிடிக்கும் வேலையை ஒப்படைக்கிறார். இந்திய தேசிய ராணுவத்தின் ரேஷன் துறை அதிகாரியின் பெண் மோகத்தால் விலாசினியிடம் சென்ற அந்த கடிதம் அவளிடமிருந்து ஜப்பான் கெம்பித்தாய் மேஜர் யாமகச்சியிடம் சென்றுவிட்டது. இந்தொனேசியா சென்று அவரைக் கொன்று கடிதத்தை மீட்டு கலிக்குஸுமானிடம் ஒப்படைக்கும் போது நேதாஜியிடம் பாரட்டைப் பெறுகிறான். நேதாஜி விமான விபத்தில் இறந்து விடுகிறார், ஜப்பான் அமெரிக்காவின் அணுகுண்டுகளால் மொத்தமாக வீழ்கிறது. மீண்டும் டச்சுக்காரர்கள் இந்தோனேசியாவில் ஆள்பவராகிறார்கள். பினாங்கில் பழைய ஐஎன்ஏ காரர்களை இந்திய தேசிய ரானுவத்தில் ஹவில்தாராக இருந்த சுந்தரம் ஆங்கிலேயர்களிடம் காட்டிக்கொடுத்து வருகிறான் என்பதை அறிந்து அங்கு சென்று அவனை மிரட்டி தற்கொலை செய்ய வைக்கிறான். பின்பு அங்கிருந்து ஊருக்கு செல்ல வேண்டும் என்று தோன்றி அதற்கு முன் இந்தனேசியா சென்று தெரிந்தவர்கள் அனைவரையும் பார்த்துவிட்டு செல்ல வேண்டும் என்று நினைக்கிறான்.
இந்தொனேசியா சென்று அங்கிருக்கும் விடுதலை புரட்சி படைக்கு கொரில்லா பயிற்சி அளிக்கிறான். பின்பு அவர்களோடு செர்ந்து கொண்டு டச்சுக் காரர்களோடு போர் செய்கிறான். அவர்கள் அடையும் போர் வெற்றிகளால் ராஜா உத்தங் என்று அறியப்படுகிறான். ஏதோ ஒரு கணத்தில் போர் சலித்து ஊர் திரும்ப நினைத்து முயலும்போது டச்சு வீரர்களோடு நடக்கும் சண்டையில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறக்கிறான்.
உலகின் அதி தீவிரமான ஒரு கொந்தளிப்பை நேரடியாக காணவும் அதில் பங்கு பெறவும் வாய்ப்பிருக்கும் ஒரு இளம் செயல் வீரனின் குறுகிய வாழ்வை சொல்கிறது. இந்த உலக சுழிப்பினையும் உலக வரலாற்றையும் ஒட்டு மொத்தமாக காணும் விசாலப் பார்வை கொண்ட தமிழ் மனது எவ்வாறு தன்னை சுய விமர்சனம் செய்து கொண்டு செயலாற்றுகிறது என்பதன் ஒரு சாத்தியத்தை பாண்டியன் வழி வெளிக்கொணர்கிறது.
தமிழர்களின் அதீத தற்பெருமைகளை உடைத்து வரலாற்றின் மொத்தத்தில் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து வெற்று பெருமிதத்தில் இருந்து வெளி வருவதே அவர்களின் முன்னேற்றத்திற்கான முதல் படியாக கருதுகிறான். சாதி ஒழிப்புகளுக்கெல்லாம் முன் மக்களுக்கு வரலாற்று தெளிவே அவசியம் என நினைக்கிறான். மித மிஞ்சிய போகத்தில் திளைத்து, வந்தவரிடமெல்லாம் ஆட்சியை இழக்கும் செயலற்ற நிலைக்கு தள்ளப்பட்ட சமூகத்திலிருந்து செயல் வீரனாக இருக்கும் இளைஞர்களை திரட்ட நினைக்கிறான். அதே நேரம் அவனும் போகத்தில் திளைப்பவனாகவே இருக்கிறான். பெண் மோகத்தை அடக்குவதிலிருக்கும் சிக்கல்களை சித்தர் பாடல்களின் வழி சிந்தித்து இறுதியில் அவன் சென்று சேருவது ஆயிஷாவிடம் தான்.
ஒவ்வொரு மனிதனின் எழுச்சியும் வீழ்ச்சியும் போலவே தான் ஒவ்வொரு இனத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும், உலக அளவில் கோளோச்சிய எத்தனையோ இனங்கள் இப்போது காணாமல் ஆகியிருப்பதையும் நாம் தப்பியிருப்பதே அரிதானது தான் என்னும் வரலாற்று பார்வை உண்மையில் திகைப்பானது. ஒரு காலத்தில் சோழர்களின் கடற்படை இந்தனோசியாவின் அரசை வென்று தன் கீழ் கொண்டு வந்தது. சோழர்களின் போர் கப்பல் சென்று வந்த இந்த கடலில் அவர்களின் கொடி வழியினரான நாம் சீனர்களின் கப்பலில் வயிற்று பிழைப்பிற்காக பினாங்கு செல்கிறோம் என எண்ணுகிறான்.
ரஷிய புரட்சி மிகப் பெரிய அளவில் இளைஞர்களின் மத்தியில் தாக்கத்தை செலுத்திய காலம். அந்த தாக்கத்திற்கு உள்ளாகும் பாண்டியன் அவன் நண்பர்களோடு புதிய உலகை உருவாக்கும் புரட்சி கற்பனைகளை ஏற்று செயல் படுவதன் வழி பஞ்ச பராரியான மக்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என நம்புகிறான். இளம் வயதில் உலகை மாற்ற முடியும் என்ற கனவினை நனவாக்க நினைப்பவனின் மனது பலவாறாக அலை பாய்கிறது. அந்த கொள்கைகளும் நிஜ வாழ்க்கையின் யதார்த்தமும் சந்திக்கும் போது ஏற்படும் அலை பாய்தல்களே பாண்டியனின் குறுகிய வாழ்வாக நாவலில் அமைகிறது.
எந்த ஒரு செயலையும் மனதில் உறுதி இருந்தால் செய்ய முடியும் என்று நம்பும் இளஞர்களுக்கே உரிய வேகம் மற்றும் செய்ய கூடிய ஆற்றலும் நிரம்பியிருப்பவன். நண்பர்களுடன் மக்களுக்கான முன்னேற்றத்தை உருவாக்க பல கொள்கைகளை விவாதித்து புரட்சி முடிவை பற்றிக் கொள்கிறான். இடைவிடாது செயலாற்றுவதே தன் சிந்தனையை சிதறடிக்காமல் இருப்பதற்கான வழி என்று எண்ணி, நிலையற்று பயணித்து செயலாற்றுகிறான்.
இன்னா செய்தாரை ஒருத்தல் நன்னயம் செய்துவிடல் என்பதெல்லாம் தாடி வைத்த கிழடுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று கூறி காட்டி கொடுக்கும் சுந்தரத்தை கொல்கிறான்.
மூட நம்பிக்கை மதத்தினை விட இந்த அறிவு விஞ்ஞானம் அமைதியையும் மகிழ்ச்சியையும் தருகிறதா ? பொய்மை பொறாமையை ஒழித்து விடுகிறதா? பொருளாசை புகழாசை ஒழிந்து விடுகிறதா? என்ற தார்மீக கேள்விகள் அவன் தேர்ந்த புரட்சி பாதையின் எல்லையினை அவனுக்கு சுட்டுகிறது. அறிவால் ஒரு உலகப் பார்வையை அடைந்து செயல் வீரனாக மாறியவனுக்கு அந்த அறிவே தடையாக ஆகுமிடத்தை அவன் உணர்வது எந்த கொள்கைப் பிடிப்பாளர்களும் ஒரு முறை சிந்திக்க கூடிய ஒன்று. கொள்கை எவ்வாறு ஒரு மதத்தினை போல் கற்பனைகளை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது என்பதையும் அதனை நம்ப வேண்டிய அவசியத்தையும் அறிந்தே இருக்கிறான். அப்படி நம்பாமல் எப்படி செயலாற்றுவது. ஒரு அரசில் சமத்துவம் என்பது பெயரளவிற்கே சாத்தியம் என்பது தெரிந்தும் சமத்துவம் என்ற கற்பனை சமூகத்திற்காக போராடுவது என்பதை, முன்னோர்கள் பெரியவர்கள் புகழ் மிக்கவர்கள் சொன்னதை நம்பி செயல் புரிய வேண்டும் என்று கூறி சிந்தனைக்கு எல்லை வகுக்கிறான். அந்த எல்லை என்பது செயலாற்றும் புரட்சியாளர்களின் அல்லது கருவிகளின் எல்லை என்று தோன்றுகிறது. ஒரு கருவியாக மாறக் கூடுவதற்கான மனசாட்சியின் கேள்விகளுக்கு ஒரு குறிப்பிட்ட அறிவு பயிற்சியின் வழி விளக்கமளித்து தெளிவு ஏற்பட்டு விட்டால் பின் தயக்கங்கள் இல்லாமல் செயலாற்ற முடியும்.
தங்கையாவிற்கும் பாண்டியனுக்கும் நடக்கும் அந்த அறிவு விவாதத்தில் தங்கையா சொந்த நாட்டைப் பற்றியும் யதார்த்த வாழ்வினைப் பற்றியும் பேசுகிறான். தமிழர்களுக்கு இந்த நாட்டை யார் ஆட்சி செய்தாலும் ஒன்று தான் என்கிறான். பாண்டியன் சங்க கால வீர யுகத்தின் குறுகிய நிலப்பகுதிக்குள் உருவான விழுமியத்தை, ஆய் எயினன் இன்னொரு குறுநில மன்னனுக்கு உதவியதை உலக அளவில் விரித்து எடுத்துக் கொள்கிறான். கொடுங்கோன்மையை எதிர்த்து எங்கு போர் நடந்தாலும் முன்சென்று உதவுவது நம் கடமை என்று கூறி இந்தோனேசிய விடுதலைக்காக போராடுகிறான்.
பாண்டியன் இந்தொனேசியா திரும்பியதும் அவனை பார்க்க வரும் அவனது பழைய தொடுப்பு மலாய் பெண் ஆயிஷாவிற்கு திருமணாமாகி விட்டது. அவனை சகோதரன் என்று அழைக்கிறாள். அவள் வீட்டிற்கு கிளம்பிவிடு விடுதலை போராளிகளோடு எந்த உறவும் வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் கூறிச்செல்கிறாள். அவனது பார்வையில் தீ இருப்பதாகவும் வாய் அச்சுறுத்துவதாகவும் சொல்கிறாள். அவள் உண்மையில் அவனை போராட சொல்கிறாளோ என்று கூட தோன்றுகிறது.
டச்சு மேஜர் இந்தொனேசிய விடுதலை வீரர்களை எதிர்த்து பாண்டியனிடம் விவாதிக்கும் போது, ஆம் தனித்தனியாயிருந்த பகுதிகளை ஒன்றாக்கி நாடாக ஆக்கியவர்கள் நீங்கள் தான். இந்த நாடு உங்களின் கீழ் முன்னேற்றம் அடைந்திருக்கலாம். ஆனால் இந்த நாட்டிலிருப்பவர்கள் இந்த ஆட்சியில் பங்கு பெறாமலிருக்கிறார்கள் என்ற உணர்வையும் சுதந்திரத்திற்கான உந்துதலையும் தவிர்க்க முடியாது. அவர்கள் சுதந்திரத்திற்கு பிறகு ஒருவரோடு ஒருவர் அடித்துக் கொண்டாலும் அது அவர்களுக்கு இடயேயான பிரச்சனை. என்று அவர்களின் தார்மீக சுதந்திரத்திற்கான உரிமையை வெளிப்படுத்துகிறான்.
தாய்லாந்தின் கேளிக்கை விடுதியில் கதிரேசனின் தீர்க்கதரிசி உரை என்பது இந்நாவலின் மிக முக்கியமான பகுதி. செவ்வியல் தன்மை கொண்டது. தமிழில் மிக அரிதாக வெளிப்படுகின்ற உயர் அங்கதம். தமிழக நண்பர்களை அறிமுகப்படுத்தும் போது முத்தையாவை சுட்டி இவர் கொஹிமாவில் பல ஆயிரம் தமிழக ஆடுகளை பலி கொடுத்தவர் என்று இந்திய தேசிய ராணுவத்தின் வீழ்ச்சியை பகடி செய்கிறான். அவனது பகடிக்கு சிரிக்கும் அமெரிக்கனைப்பார்த்து முன்னோர்களின் வார்த்தையை பொய்யாக்கி அணுவைபிளந்து ஜப்பானியர்கள் தலைமீது கொட்டிய விஞ்ஞானத்தினை கேலி செய்கிறான். வெள்ளையர்களின் மனசாட்சியை நோக்கி கடவுளின் பெயரால் அவர்கள் நடத்தும் போர்களையும் வலு குறைந்த நாடுகளின் மக்களை கொன்று குவிப்பதையும் சமத்துவ கருத்தின் ஆழத்தில் புதைந்து இருக்கும் நிற வெறியினையும் பகடி செய்கிறான். மகாபாரதத்தில் போர் முடிந்த பின் பதவியேற்கும் தருமனிடம் குருதி கறை படியாத செல்வத்தை கோரும் சார்வாகன் நினைவிற்கு வருகிறது.
பாண்டியனில் செயல்படும் வரலாற்று உணர்வு அவன் அறியாமலே அவனை சங்ககாலம் தொட்டு இன்று வரை நீளும் ஒரு தொடர்ச்சியாக மாற்றுகிறது என்று தோன்றுகிறது. அதீத தற்பெருமைகள் மீதும் சங்க கால இன்ப நாட்டத்தின் மீதும் மற்றவர்களிடம் நாட்டை இழந்த செயலற்ற நிலையினையும் கடுமையாக விமர்சிப்பவன், உதவி தேவைப்படுபவர்களுக்காக சென்று போரிடுவதும், காமத்தில் திளைப்பதும், இந்தனோசிய விடுதலை படையுடன் காட்டில் இருக்கும் போது வீசும் முல்லை பூவின் மணத்தில் தன் வீட்டிற்கு திரும்பும் எண்ணத்தை அடைவதும் என சங்க தமிழ் மனதின் தொடர்ச்சியாகவே நீடிக்கிறான்.
இந்நாவல் அடையும் செவ்வியல் தன்மை இது கொண்டிருக்கும் உணர்வு
சமநிலையால் தான் என்று தோன்றுகிறது. இந்நாவலில் சொல்லப்படும் ஒவ்வொரு உணர்வின் கசப்பின்
விமர்சனத்தின் மறு பக்கமும் இதில் காட்டப்படுகிறது. வரலாற்றில் ஒவ்வொரு இனமும் அடையும்
எழுச்சியும் வீழிச்சியும், செட்டியார்களின் குடும்பங்களில் தொடர்ந்து நிகழும் எழுச்சியும்
வீழ்ச்சியும், தமிழர்களின் பழங்கால கடல் வலிமை மற்றும் தற்போது வயிற்றுப் பிழைப்பிற்காக
சீன கப்பலில் செல்லும் நிலை, ஜப்பான், ஜெர்மனியின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி, டச்சு
ஆங்கிலேய அமெரிக்கா மற்றும் ரஷியாவின் வீழ்ச்சி மற்றும் எழுச்சி, சங்க கால மிதமிஞ்சிய
போகத்தின் மீதான விமர்சனமும் பாண்டியனது போக நுகர்வும், வெள்ளையர்களின் ஆளுமைத் திறனும்
அவர்களது நிற மேட்டிமையும், மதத்தின் மூட நம்பிக்கையும் அறிவு வாதத்தின் போதாமையும்,
தமிழர்களின் வீரத்தின், போகத்தின் மீதான விமர்சனமும் தமிழர்களின் விழுமியங்களின் தொடர்ச்சியும்,
இந்திய தேசிய ராணுவம் என்கிற அமைப்பும் அதில் நடக்கும் ஊழலும் கொஹிமாவில் அடையும் தோல்வியும்,
விலாசினியும் ஆயிஷாவும் என மிகப்பெரிய சமநிலையை
உருவாக்கி ஆழ்ந்த சிந்தனையை தூண்டும் மிக முக்கியமான செவ்வியல் படைப்பு என்று தோன்றுகிறது.
ரஷிய புரட்சியின் பாதிப்பு, தன் இன மக்களின் உண்மைநிலையினை
அறியும் வரலாற்றுப் பிரக்ஞை ஆகியவற்றோடு இளமையின் வேகமும் துடிப்புமே பாண்டியனது செயலாற்றும்
வழியாக அமைந்திருக்கிறது. உலக வரலாற்றின் ஒரு பெரும் சுழலில் ஒட்டு மொத்த பார்வை கொண்ட
இளைஞனின் செயலாற்றலை சொல்லும் அதே நேரத்தில் அவனது எல்லைகளையும் சொல்கிறது. 1962 இல்
எழுதப்பட்ட இந்நாவலின் பாண்டியனோடு சே குவேராவின் வாழ்வினை ஓரளவு ஒப்பிட்டு பார்க்கலாம்.
மூட நம்பிக்கை மதத்தை முன்னேற்றத்திற்கு தடையாக காணும் பாண்டியன், அவன் பற்றும் அறிவு
பாதையில் இருக்கும் போதாமைகளையும் ஆராய்ந்து உணர்ந்தவனாகவே இருக்கிறான். இருந்தும் தான் கனவு காணும் சமூகத்திற்காக போராடி
உயிர் துறக்க தயாராக இருக்கும் செயல் வீரனாகவே தன் எல்லையை நிறுத்திக் கொள்கிறான்.
தனக்கு அவன் வகுத்துக் கொள்ளும் எல்லை என்பது சிந்தனையில் அவனுக்கு இருக்கும் எல்லை
என்ற அளவிலேயே கருத முடிகிறது. அல்லது பெரும் செல்வாக்கு செலுத்திய ரஷிய புரட்சி என்னும்
சிந்தனையின் எல்லை என தோன்றுகிறது.
இந்த பெரும் அனுபவங்கள் யாவுமே சிறியவையாக ஆகிவிடக்கூடிய
வகையில் பாண்டியனது வாழ்க்கை பரபரப்பாக அமைந்திருக்கிறது. பல உயரங்கள் அதீத பாதாளங்களெல்லாம்
மிக மிக சாதாரணமாக கடந்து செல்லும் வகையில் அவன் வாழ்க்கை அமைந்திருக்கிறது. டச்சு
மேஜர் டில்டனுக்கு கைதியாக இருக்கும் போது உதவுவது, வெட்டி வைத்த தலைகள், கூட்டு பலாத்காரம்,
மக்களின் கொள்ளையடிப்பை, டச்சு படைகளின் வீழ்ச்சி,
ஜப்பானின் வெற்றி, அமெரிக்கா மீது ஜப்பானின் வெற்றி, பின் தோல்வி, ஜெர்மானியின் ஐரோப்பா
மீதான வெற்றி, ரஷ்யாவின் பின் வாங்கல்கள், தோல்வியிலிருந்து மீண்டு ஜெர்மானியர்களை
வெல்லும் ரஷியா, ஹிட்லரின் தற்கொலை, ஜப்பான் மீது அணுகுண்டு வீச்சு, ஜப்பனின் தோல்வி,
மீண்டும் டச்சுக்காரர்களின் பிடியில் இந்தோனேசியா, பினாங்கில் பெரும் கடை முதலாளியின்
கடை மீது குண்டு விழுந்து குடும்பத்தோடு அனைவரும் பலியாவது, ஜப்பான் மேஜரை கொள்வது,
உடன் பணியாற்றிய ஹவில்தாரை கொல்வது, ஆயிஷாவின் திருமணம், மதுரை கேரள பெண்கள், செட்டிகளின்
வீழ்ச்சி, தொங்கானில் சூறாவளியில் மாட்டி தப்பிப்பது, ஜாரங்க் படைபிரிவில் ஏற்பட்ட
சண்டை, நேதாஜி, கலிக்குஸுமான், விலாசினி, சுந்தரம், இந்தோனேசிய விடுதலை கொரில்லா சண்டை,
பதக்கம், டில்டன் இவை எல்லாவற்றையும் பார்க்கும் ஒரு வாழ்க்கை அவனுக்கு வாய்த்திருக்கிறது.
இந்த புயலில் தொங்கானில் ஏறுபவனுக்கு மட்டுமே அந்த வாழ்க்கை சாத்தியம் என்று தோன்றுகிறது.
இந்த வாழ்வனுபவத்தை தான் இந்நாவல் சாத்தியமாக்குகிறது. எத்தகைய வரலாற்று முக்கியத்துவம்
வாய்ந்த நிகழ்வுகளும் காலத்தின் ஓட்டத்தில் மிக சிறியனவாக கடந்து செல்லப்படுவதும் மற்றும்
நிலையற்றதுமாக உள்ளது என்ற தரிசனத்தை இரண்டால் உலகப்போரின் காலத்திலும், இணையாகவே வரலாற்றின்
தொடக்க காலம் எகிப்து முதல் சங்க காலம் வழியாக சமகாலம் வரையான வரலாற்றுப் பின்னனியிலும்
இந்நாவல் அளிக்கிறது என்று தோன்றுகிறது.
Comments
Post a Comment